உலக நாடுகளிடையேயான பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2 விண்கலம் இன்று பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ரூ.978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை உருவாக்கி உள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் எந்தவொரு நாடும் இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ளாத நிலையில், புதிய முயற்சியுடன் களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இறுதி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 பயணம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தடைப்பட்டது.
கோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில், சந்திரயான் விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்குத் தொடங்கியது. சந்திரயான் 2வின் பயண காலம் சற்று தள்ளிப்போனதால், விண்கலத்தின் பயணத்தில் சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பூமியை சந்திரயான் விண்கலம் 17 நாட்கள் சுற்றுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 6 முதல் 8ம் தேதிக்குள் சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிரங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று சிறிய ரக கருவிகள் உள்ளது. இவற்றில் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.